யாழ் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை விஞ்ஞானபீட வளாகத்தில் இடம்பெற்றன.வழமையாக தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் மாணவர்கள் வரவேற்கின்ற போதிலும் இன்றைய தினம் தமிழ் மாணவர்களால் மேள, தாள கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர்.பெரும்பான்மையினத்தவர்களான சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இரு மாணவ குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.இதன்போது பொல்லுகள், தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊடகவியலாளர் அங்கு சென்ற போதிலும், அவர்களையும் அச்சுறுத்தி மாணவர்கள் விரட்டியடித்துள்ளனர்.தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் தாம் தப்பி, பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியில் வந்துள்ள  போதிலும் சிங்கள மாணவர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாக  எமது செய்தியாளர்  தெரிவித்தார்.இந்த நிலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் பொலிசார் சிங்கள, தமிழ் மாணவர்களை தனித்தனியே பிரித்து  வைத்திருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.இதேவேளை இந்த மோதல்களின் போது விஞ்ஞானபீட கட்டடமொன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment