பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே

இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரித்தானிய தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரயான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் முள்ளிவாய்க்கால் கொடூரங்களை நினைவுகூரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இறுதிப்போரிலிருந்து உயிர்தப்பி பிரிட்டனுக்கு வந்து அரசியல் தஞ்சம்கோரியுள்ள களமுனை வைத்தியர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, தமது கோர அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசனின் புதல்வர் பார்த்தீபனும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் ஆளும் பழமைவாதக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். என்பீல்ட் வடக்கிற்கான பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் உரையாற்றுகையில் “நாம் இவ்வாறான சாட்சியங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது தான் போர்க்குற்றம் என்றால் என்ன என்பதனையும், அதற்கு எவ்வாறான விலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் ஆர்த்மார்த்தமாக அறியக்கூடியதாக இருக்கிறது. இந்த விடயங்கள் குறித்து விசாரணைசெய்ய காத்திரமான சர்வதேச உள்ளீடு அடங்கலான ஒரு விசாரணைபொறிமுறை அமையவில்லையாயின், இலங்கையில் நிலையான சமாதானம் ஒருபோதும் ஏற்படாது. இலங்கைத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே. இவ்வாறான கோரச் சம்பவங்கள் இடம்பெற்றிக்கும்போது இதனை வேறு எவ்வாறு அழைப்பது. பொறுப்புக்கூறும் நடைமுறையில் சர்வதேச உள்ளீடு நிட்சயம் உள்வாங்கப்படவேண்டும். இதனைத் தான் ஐ.நா கூறியிருக்கிறது. இதனைத் தான் சிறிலங்கா அரசும் ஏற்றுக்கொண்டிருந்தது”. என தொிவித்தார்.

0 comments:

Post a Comment