ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், திரைப்பட இயக்குநர் சீமான் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் நேரில் சந்திப்பதுடன், அவரிடம் அரசியலுக்கு வருமாறும் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதையடுத்து இது தொடர்பாக ரஜினிகாந்த்தும் பலரிடம் ஆலோசனை செய்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே ரஜினிகாந்த் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த மாதம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் தனது கருத்துகளை பேசினார்.
தொடர்ந்து அடுத்த கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இதனிடையே ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து எப்போது வேண்டுமானலும் அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை உற்று நோக்கி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் மிக ஆர்வமாக காத்துக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. தீபாவளிக்கு நாம் வைக்கும் பெரிய பட்டாசு புஷ் ஆகி விடும். அது வெடித்து விடும் என்று நாம் காலைத் தூக்குவோம். ஆனால் வெடிக்காமல் போகும்.
அதுபோல் ரஜினி அரசியலுக்கு வந்தால் புஷ்வானமாகிவிடுவார். அரசியலில் மற்ற அரசியல்வாதிகளைப் போலவும், அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையேதான் இவரும் செய்வார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மறைமுகமாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. எனவே குடியரசுத் தலைவர் பதவிக்கு அந்த கட்சி வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளித்து இருக்கிறது.
தமிழக மக்கள் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆட்சியை எதிர்பார்க்கவில்லை. காமராஜர், கக்கன் போன்ற ஆட்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறினார்.
No comments:
Post a Comment